லோடு ஆட்டோவால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மோதிக் கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கொற்கை விலக்கு பகுதியைச் சேர்ந்த முருகவேல் (44) என்பவர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.மெக்கானிக்காக பணியாற்றி வந்த முருகவேல், மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். கடந்த 2021 ஜனவரி 31-ஆம் தேதி இரவு மது அருந்திய நிலையில் ஏரல் பாரதியார் சாலையில் உள்ள தள்ளுவண்டி கடையில் தகராறில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ்காரர் பொன் சுப்பையா விசாரணை நடத்தி, முருகவேலின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பாலு (55), மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வாகனத்தை போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்து, மறுநாள் விசாரணைக்கு ஆஜராகி அதை பெற்றுச் செல்லுமாறு முருகவேலிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.அடுத்த நாள் அதிகாலை 12.45 மணியளவில், கொற்கை நாலுமுக்கு சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலுவும், போலீஸ்காரர் பொன் சுப்பையாவும் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது லோடு ஆட்டோவுடன் நின்றிருந்த முருகவேலை பார்த்த போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து சென்றனர்.இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், தன்னிடம் இருந்த திருட்டு லோடு ஆட்டோவை வேகமாக ஓட்டி, வாழவல்லான் ஊர்காத்த சுவாமி கோவில் முன்பாக சென்றுகொண்டிருந்த போலீசாரின் மோட்டார் சைக்கிளில் மோதியதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாலு பலத்த காயமடைந்து உயிரிழந்தார். போலீஸ்காரர் பொன் சுப்பையா காயங்களுடன் உயிர்தப்பினார்.இந்த சம்பவம் தொடர்பாக ஏரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். அதில், முருகவேலுக்கு ஆயுள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜரானார்.