தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். இதற்காக கடந்த 10-ந் தேதி இரவு சுமார் 10 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் புறப்பட்ட அவர், துபாய் வழியாக லண்டனை சென்றடைந்தார். நேற்று காலை 7 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்த விஜய்க்கு, இந்திய நேரப்படி காலை 11.30 மணியாக இருந்தது. விமான நிலையத்தில் பிரிட்டன் தமிழ் சங்க தலைவர் ஜேக்கப் ரவிபாலன், த.வெ.க. துரை கண்ணன் மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழர்கள் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலீடுகளை ஈர்ப்பதே முக்கிய நோக்கம் தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து, உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே விஜய்யின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை கொண்டு வருவது தொடர்பாக முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். சில்வர்ஸ்டோனில் கார் பந்தயம் விஜய்யின் பிரிட்டன் பயணத்தில் முக்கிய நிகழ்வாக, புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலில் நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை இன்று அவர் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
Advertisement
இந்த போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். அவருடன் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கும் போட்டி, இரவு 11.45 மணிக்கு நிறைவடைகிறது. அஜித்தை சந்தித்த விஜய் கார் பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காக சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டிற்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்றார். அங்கு திரண்டிருந்த லண்டன் வாழ் தமிழர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டும், ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டும் மகிழ்ந்தனர். தொடர்ந்து நடிகர் அஜித்குமாரை விஜய் சந்தித்தார். அப்போது இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வரவேற்றுக் கொண்டனர். கார் பந்தயத்தில் வெற்றி பெற அஜித்துக்கு விஜய் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் முதல்-அமைச்சர் விஜய்யும், நடிகர் அஜித்குமாரும் இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தனர். இந்த சந்திப்பை நேரில் கண்ட இங்கிலாந்து வாழ் தமிழர்களும் ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.