மராட்டியம்: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்
மராட்டிய மாநிலம் நாக்பூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள 12 பள்ளிகளுக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிகளுக்கு வந்த தகவலில், பள்ளி வளாகங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை வரும் 31-ம் தேதி வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவ-மாணவிகள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், 12 பள்ளிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து, 12 பள்ளிகளுக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.