தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் இந்த தொகுதிகளில் நான்கு முனைப் போட்டி நிலவியது. தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதேபோன்ற போட்டி உருவாகியுள்ளது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன. தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமனும், தாராபுரம் தொகுதிக்கு சுகன்யாவும் ஏற்கனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் வரும் 13-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளனர். த.வெ.க.வில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியையும், சத்யபாமா தாராபுரம் தொகுதியையும் சேர்ந்தவர்கள். இதற்கிடையே, அ.தி.மு.க. சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பின்னர் த.வெ.க.வில் இணைந்ததால், அவர்களே மீண்டும் தங்களுக்கு எதிராக போட்டியிடலாம் என அ.தி.மு.க. கருதுகிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் அ.தி.மு.க. தலைமை வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கேற்ப வேட்பாளர்களை தேர்வு செய்ய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாகவும், இரு தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கணிகா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி வின்சென்டின் மகளும் வழக்கறிஞருமான உமா சங்கரியும் அ.தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.