மணிப்பூரில் பதற்றம்: பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
மணிப்பூரில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 20 முதல் 22-ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) புதுப்பிக்க வேண்டும், தொகுதி மறுவரையறை நியாயமான முறையில் நடைபெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘நியாயமான தொகுதி மறுவரையறைக்கான இயக்கம்’ (JFD) சார்பில் 48 மணி நேர பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.பொது வேலைநிறுத்தத்தின் இரண்டாவது நாளான இன்று, மணிப்பூரின் சில மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்கள் அரசியல்வாதிகளின் உருவ பொம்மைகளை எரித்ததுடன், பேரணிகளிலும் ஈடுபட்டனர்.மேலும், போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 20 முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் புறக்கணிக்கப் போவதாக JFD அறிவித்துள்ளது.இதையடுத்து, மாநில கல்வித் துறை வெளியிட்ட உத்தரவில், சட்டம்-ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 20 முதல் 22-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மூட ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளும், பல்வேறு கல்வி வாரியங்களுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களும் இந்த உத்தரவுக்கு உட்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர் மற்றும் தௌபால் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பந்த் ஆதரவாளர்கள் தனியார் வாகனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை தடுத்து நிறுத்தி, அவற்றை திருப்பி அனுப்பினர்.