ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளின் திருமணம் இன்று நடைபெற இருந்த நிலையில், மின்சாரம் தாக்கி தந்தை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்புல்லாணி அருகே ரெகுநாதபுரம் பகுதியில் உள்ள கொல்லந்தோப்பைச் சேர்ந்தவர் கருப்பையா (58). இவரது இளைய மகள் முனீசுவரிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த கருப்பையா, வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மட்டை வேலி சரிந்து கிடந்ததை கவனித்தார்.
Advertisement
அதனை கம்பியைக் கொண்டு கட்டி சீரமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கம்பி வீட்டின் மின் இணைப்பு மீட்டர் பெட்டியில் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் கருப்பையாவை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் பலத்த அதிர்ச்சியடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகளின் திருமணம் நடைபெற இருந்த நாளிலேயே தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.