பட்டாசு சத்தத்தால் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை; தனி ஆளாக விரட்டிய 60 வயது பெண்
நீலகிரி மாவட்டம் குன்னூர் காமராஜபுரம், ஆரோக்கியபுரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில், அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. விழாவின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதன் சத்தத்தால் மிரண்ட சிறுத்தை, தர்மா என்பவரின் வீட்டுக்குள் திடீரென புகுந்தது. பின்னர் கட்டிலுக்கு அடியில் சென்று பதுங்கிக் கொண்டது.வீட்டில் இருந்தவர்கள் சிறுத்தையை பார்த்ததும் அச்சத்தில் வெளியே ஓடினர். அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சிறுத்தையை விரட்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.அப்போது தர்மாவின் தாயார் பூஜம்மாள் (60), அச்சமின்றி கையில் கம்புடன் சிறுத்தையை நோக்கி சத்தமிட்டு விரட்டினார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுத்தை, அருகிலிருந்த புதருக்குள் சென்று மறைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், வீட்டுக்குள் சிறுத்தை புகுந்ததால் பொதுமக்களும் பீதியடைந்தனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஊருக்குள் சிறுத்தைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
மனித-வனவிலங்கு மோதலில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, இப்பகுதியில் தொடர்ந்து சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தினர்.கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 15-ந்தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும், ஊருக்குள் சிறுத்தைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இந்திரா நகர் பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.