நேபாள வெள்ளம்: 9 நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்பு
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த 2 தொழிலாளர்கள், 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பனிப்பாறை சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் நேபாளத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. திரிசூலி 3ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பாதைக்குள் வெள்ளத்துடன் அடித்துவரப்பட்ட சேறு மற்றும் இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கினரஇதையடுத்து நேபாள ராணுவத்தினரும் மீட்புப் பணிக்குழுவினரும் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுரங்கத்தின் உள்ளிருந்து சிலரது குரல்கள் கேட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன. சுரங்கத்திற்குள் சுமார் 170 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்த மெக்கானிக்கல் போர்மேன் சஞ்சய் ஷா மற்றும் மேற்பார்வையாளர் கபீர் மகர்ஜன் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.சுரங்கத்திற்குள் காற்றோட்ட வசதி இருந்ததால், உணவு மற்றும் குடிநீர் இல்லாமலேயே அவர்கள் 9 நாட்கள் உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.