நச்சுத்தன்மை கொண்ட ‘ஊமத்தங்காய்’ விற்பனை: அமேசான், இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் உணவு உரிமங்கள் ரத்து
கர்நாடகாவில் நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தை (Datura) பழங்கள் மற்றும் விதைகளை மனிதர்கள் சாப்பிடும் உணவுப் பொருட்களாக ஆன்லைனில் விற்பனை செய்ததாகக் கூறி, அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் உள்ளிட்ட முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களின் உணவு உரிமங்களை மாநில அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
ஊமத்தை செடி மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அதிக நச்சுத்தன்மை கொண்டதாகும். மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளின்படி, இதை மனிதர்கள் உணவாக உட்கொள்வது அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஆன்லைன் தளங்களில் ஊமத்தை பழங்களும் விதைகளும் மனித நுகர்வுக்கான உணவுப் பொருட்களாக இடம்பெற்றிருந்தது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், அவற்றுடன் உணவுப் பாதுகாப்பு உரிம எண்களும் பயன்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால், கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடந்த வாரம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
நிறுவனங்கள் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர் கே. சீனிவாஸ், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் நிறுவனங்களின் உணவு உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த நிறுவனங்களுக்கு ஊமத்தைப் பொருட்களை வழங்கிய மொத்த விற்பனையாளர்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த விவகாரம் தொடர்பாக அமேசான் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் வெளியிடவில்லை. ஸ்விகி இன்ஸ்டாமார்ட் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க அவகாசம் கோரியுள்ளது. அதேவேளை, பிக்பாஸ்கெட் நிறுவனம் ஊமத்தைப் பொருட்களின் விற்பனையை உடனடியாக நிறுத்தியதாகவும், இனி அவற்றை ‘மனித நுகர்வுக்கு அல்ல’ என்ற எச்சரிக்கையுடன் மட்டுமே விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.ஆன்லைன் விற்பனை தளங்கள் உணவுப் பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றனவா என்பதை உறுதி செய்ய தொடர்ந்து கண்காணிப்பும் சோதனைகளும் மேற்கொள்ளப்படும் என கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.