தோஷம் கழிப்பதாக கூறி நிர்வாண பூஜை: கனடா பெண்ணை மிரட்டி பணம் பறித்த ஜோசியர் கைது
சென்னை கோடம்பாக்கத்தில் கனடா குடியுரிமை பெற்ற பெண்ணிடம், தோஷம் நீங்கும் எனக் கூறி நிர்வாண பூஜை நடத்த வைத்து, பின்னர் அந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் ஜோசியரை போலீசார் கைது செய்துள்ளனர்.இலங்கைத் தமிழரான 37 வயது பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தற்போது தனியாக வசித்து வருகிறார். சென்னையில் தங்கியுள்ள அவர், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்று வருகிறார்.சுமார் 10 நாட்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றிருந்த அந்தப் பெண், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி முத்து என்ற கிளி ஜோசியரை சந்தித்து ஜோசியம் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து ஜோசியர் பல தகவல்களை தெரிவித்ததாகவும், இதனால் அவர் மீது பெண்ணுக்கு நம்பிக்கை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்று பிரபலமாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை அந்தப் பெண் ஜோசியரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு, தான் தங்கியிருக்கும் அறையில் இருந்து நிர்வாண பூஜை செய்தால் புகழ் கிடைக்கும் என இசக்கி முத்து கூறியதாக தெரிகிறது.இதை நம்பிய அந்தப் பெண், தான் தங்கியிருந்த அறையில் நிர்வாண பூஜை செய்ததாகவும், அதனை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்தபடியே இசக்கி முத்து வீடியோ காலில் நேரடியாக பார்த்ததாகவும் கூறப்படுகிறது.