தென் கொரியாவில் பயங்கர நிலச்சரிவு: ஒருவர் உயிரிழப்பு
தென் கொரியாவின் கியோஜே நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிர பருவமழை பெய்து வருகிறது. கியோஜே பகுதியில் சில மணி நேரங்களிலேயே 500 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, மலைப்பகுதிகள் வலுவிழந்தன.இந்நிலையில், ஒக்போ-டோங் பகுதியில் திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து சரிந்து வந்த ஏராளமான மண் மற்றும் பாறைகள், மலையடிவாரத்தில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு மீது விழுந்தன. இதில் கட்டிடத்தின் முதல் தளம் வரை மண்ணில் புதைந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.தகவல் கிடைத்ததும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
நவீன மீட்பு உபகரணங்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுவட்டார குடியிருப்புகளில் வசித்த 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.