தென்காசி அருகே வேட்டைக்காரன் குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேர் படுகாயம் அடைந்தனர். பேருந்து திடீரென ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்ததால், அதில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
Advertisement
இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.