தென்அமெரிக்காவில் சமயபுரம் மாரியம்மன் கோவில்; ராஜகோபுரம், தெப்பக்குளத்துடன் பிரம்மாண்ட திட்டம்
திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.அந்த பக்தர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ரூபினா அரோனும் ஒருவர். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தொடர்ந்து பங்கேற்று, தீமிதி உள்ளிட்ட பக்தி வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்.இந்த நிலையில், தென் அமெரிக்காவில் உள்ள கயானாவில் சமயபுரம் மாரியம்மன் கோவிலை முன்மாதிரியாகக் கொண்டு புதிய கோவில் ஒன்றை அமைக்கும் முயற்சியை அவர் தொடங்கியுள்ளார். இதற்கான ஆலோசனைகளை பெறுவதற்காக சென்னை இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரூபினா அரோன், "தென் அமெரிக்காவின் கயானாவில் வசித்து வந்தாலும், சமயபுரம் மாரியம்மனையே எங்கள் குடும்பத்தின் காவல் தெய்வமாக வணங்கி வருகிறோம். ஆண்டுதோறும் ஆடி மாதம் மற்றும் சித்திரை தேர் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசிப்பது வழக்கமாக உள்ளது.
கடந்த ஆண்டு அம்மனிடம் வைத்திருந்த ஒரு வேண்டுதல் நிறைவேறியதால், அங்க பிரதிஷ்டை செய்து நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்," என்றார்.மேலும், "கயானாவில் 5% ஏக்கர் பரப்பளவில் ராஜகோபுரத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். கோவிலில் சமயபுரம் மாரியம்மன் சன்னதி மட்டுமின்றி விநாயகர், முருகன், சிவன், நவகிரகங்கள், தெப்பக்குளம், யாகசாலை, தீமிதி மைதானம் மற்றும் கலாசார மையமும் இடம்பெறும். இந்தப் பணிக்காக உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றன," என்று தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், "இந்த முயற்சி வெற்றியடைய அம்மனின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அங்க பிரதிஷ்டை வழிபாட்டை மேற்கொண்டேன். இந்த வேண்டுதல் முழுமையாக நிறைவேறியதும், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர் திருவிழாவில் கட்டாயம் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுப்பேன். கயானாவில் கோவில் கட்டும் திட்டம் தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் ஆலோசனைகள் பெற்றுள்ளேன்," என்றார்.