திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் பணி திடீர் நிறுத்தம்; அதிகாரிகள் சோதனையில் முறைகேடு அம்பலம்
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் பணியில் முறைகேடு நடந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு அந்தப் பணியை உடனடியாக நிறுத்தினர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள திருமூர்த்தி அணைக்கு, வனப்பகுதிகளில் இருந்து வரும் ஆறுகள் மற்றும் ஓடைகளே முக்கிய நீராதாரங்களாக உள்ளன.இந்த அணையின் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மொத்தம் 3,76,152 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், பழைய ஆயக்கட்டு பாசனத் திட்டத்தின் கீழ் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால்கள் வழியாக 3,044 ஏக்கர் நிலங்களுக்கும் நீர் வழங்கப்படுகிறது. இதனுடன், அணையை அடிப்படையாகக் கொண்டு பல கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.கோடை காலத்தை முன்னிட்டு, அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்ற விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியது.
இதன்படி கடந்த 27-ஆம் தேதி முதல் மண் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டன.எனினும், விவசாயிகள் என்ற பெயரில் சிலர் வண்டல் மண்ணை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.இந்த விவகாரம் தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அதிகாரிகள் திருமூர்த்தி அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மண் ஏற்றி சென்ற வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில் விதிமுறைகளை மீறி வண்டல் மண் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, வண்டல் மண் அகற்றும் பணியை அதிகாரிகள் உடனடியாக நிறுத்தி வைத்தனர்.இதுவரை எடுக்கப்பட்ட வண்டல் மண் எங்கு கொண்டு செல்லப்பட்டது, அது எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது, யாருக்கு விற்கப்பட்டது என்பன குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.