திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளை மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அய்யம்பாளையம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (32). இவருக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில், இன்று பைக்கில் மண்ணச்சநல்லூர் புறவழிச்சாலை வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. மழைக்கு மத்தியில் பைக்கில் சென்று கொண்டிருந்த கார்த்திக்கை திடீரென மின்னல் தாக்கியது.
Advertisement
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில் கார்த்திக் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அய்யம்பாளையம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.