தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், தவெக அரசு மேற்கொள்ளும் சோதனைகள் மற்றும் மிரட்டல்களுக்கு தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சட்டமன்றத்தில் தி.மு.க.வை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாததால் தவெக அரசு தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சமாக தி.மு.க.
Advertisement
முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேருவை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மிரட்டல்கள் மற்றும் சோதனைகளுக்கு அஞ்சிப் பணிந்து செல்லும் இயக்கம் தி.மு.க. அல்ல என்றும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் தவெக அரசின் நடவடிக்கைகளைக் கண்டு தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.