தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.சமையலில் முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரத்து குறைந்துள்ளதால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் இதன் விலை ரூ.80-க்கும் அதிகமாக உள்ளது.வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வெங்காயம் டன் கணக்கில் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
Advertisement
இதன் மூலம் குறைந்த விலையில் வெங்காயத்தை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தமிழக அரசும் நியாயவிலைக் கடைகள் வாயிலாக குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.இதன் தொடக்கமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் வெங்கடரமணன் மற்றும் காந்திராஜ் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தனர்.