தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி காவிரி நீர்
தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி காவிரி நீர்
காவிரி நீரை தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களும் முறையாகப் பகிர்ந்து கொள்வதற்காக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் 2018-ம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்று குழுவும் உருவாக்கப்பட்டன. இந்த அமைப்புகள் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி, மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர் தொடர்பான விவகாரங்களில் முடிவுகளை எடுத்து வருகின்றன. இதுவரை காவிரி மேலாண்மை ஆணையம் 52 முறை கூடியுள்ளது.இந்நிலையில், ஆணையத்தின் 54-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் தற்போது திறக்கப்படும் நீரின் அளவு தொடர்பான விவரங்களை அந்த மாநில அதிகாரிகள் ஆணையத்திடம் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அடுத்த 15 நாட்களும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டால், தமிழகத்துக்கு மொத்தம் 11.66 டிஎம்சி நீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.