ஜார்கண்ட்: தேர்வு ரத்து முடிவுக்கு மாணவர்கள் வரவேற்பு; சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை
ஜார்கண்ட் மாநில அரசு பணியாளர் நியமனத் தேர்வை ரத்து செய்வதாக முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளதற்கு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.ஜார்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஜே.எஸ்.எஸ்.சி.-சி.ஜி.எல். தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 24 நாட்களாக போராட்டம் நீடித்த நிலையில், மாணவர்கள் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.தங்களது எதிர்ப்பை தீவிரப்படுத்தும் வகையில், ஆளும் அரசுக்கு எதிராக ஹேமந்த் சோரன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் உருவ பொம்மைகளையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் எரித்தனர்.மாணவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, அரசு பணியாளர் நியமனத் தேர்வை ரத்து செய்ய முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார். மேலும், டேட்டா புராசஸிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதற்கிடையே, போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு மாநில மந்திரிகள் தீபிகா பாண்டே சிங் மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோர் நேரில் சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, 16 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக மாணவர்கள் தெரிவித்தனர்.அரசின் இந்த நடவடிக்கையை மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மகதோ வரவேற்றார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், மாநில நிர்வாகம், காவல்துறை, ஊடகங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.மேலும், எதிர்காலத்தில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தேர்வு முறையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.