சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்: 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
சென்னையில் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் ஒருங்கிணைந்த நவீன நிர்வாக வளாகம் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடைபெறுகிறது. இதற்கிடையே, சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் உலகத் தரத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்குகள், நவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம், அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள் ஆகியவை அமைக்கப்படும். மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அதிகளவில் பதக்கங்களை வெல்லும் வகையில் இந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் செயல்படும். குறிப்பாக, ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் திறன் கொண்ட வீரர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும்.மேலும், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். சர்வதேச தரத்திலான கார் பந்தயத் தடம், அதற்குத் தேவையான நவீன உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் இந்த நகரில் உருவாக்கப்படும்.