சட்டப்பேரவையில் திமுகவினர் தேவையின்றி கூச்சலிடுகின்றனர்: அமைச்சர் ரமேஷ்
திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சட்டப்பேரவை ஜனநாயக நடைமுறைகளின்படி செயல்பட்டு வருகிறது. பேரவை நடவடிக்கைகளில் மரபுக்கு மாறான அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது வழக்கமான நடைமுறையாகும். கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. தற்போது தவெக ஆட்சியில் ஜனநாயக நடைமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் முறையாக மேற்கொண்டு வருகிறார்.தவெகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் அவையில் கண்ணியத்துடன் அமர்ந்து, தங்களுக்கு உரிய நேரத்தில் பேசுகின்றனர். ஆனால் நாங்கள் பேசும்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பிரச்சினையை உருவாக்கும் நோக்கில் செயல்படுகின்றனர். தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதும், முன்வரிசைக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் நடைபெறுகிறது.சட்டப்பேரவையில் திமுகவினர் தேவையின்றி கூச்சலிடுகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான அறிவிப்புகள் குறித்தும் திட்டமிட்டு தவறான பிரசாரம் மேற்கொள்கின்றனர்.முதல்-அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்படும் போது, அதற்கு அமைச்சர்கள் பதிலளிப்பதில் என்ன தவறு இருக்கிறது? அமைச்சர்கள் அனைவரும் அரசின் ஒரு அங்கமாகவே செயல்படுகின்றனர்.
எங்கள் ஆட்சியில் முதல்-அமைச்சரிடம் கேள்விகள் கேட்கப்பட்டால், அதற்கான பதிலை அமைச்சர்கள் வழங்குகின்றனர். எதிர்க்கருத்து இருந்தால் உறுப்பினர்கள் எழுந்து பேசி தெரிவிக்கலாம்; யாரையும் பேசக்கூடாது என்று தடுக்கவில்லை. துறை சார்ந்த அமைச்சர்களும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். எனவே, கேள்விகள் முறையாக உள்ளனவா, அதற்கு அளிக்கப்படும் பதில்கள் சரியாகஉள்ளனவாஎன்பதைத்தான்பார்க்கவேண்டும்.சட்டப்பேரவையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, தங்கள் ஆட்சியில் எந்த தவறும் நடைபெறவில்லை என்றும், மிகவும் தூய்மையான நிர்வாகத்தை வழங்கியதாகவும் கூறுகிறார். அப்படியிருக்கும்போது, தற்போதைய ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் வெளியாகவுள்ள அறிவிப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள அதிகாரிகள் மூலம் தகவல்களை சேகரிக்க வேண்டிய அவசியம் என்ன?நாங்கள் எந்தெந்த கோயில்களில் என்ன பணிகளை மேற்கொண்டுள்ளோம், என்னென்ன தணிக்கைகள் செய்யப்பட்டுள்ளன என்பது போன்ற விவரங்களை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை ஏன் ஏற்படுகிறது? தவறு எதுவும் செய்யவில்லை என்றால், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய காரணம் என்ன? அரசின் ரகசிய தகவலை அறிந்து கொண்டு, அதை சட்டப்பேரவையில் பேசுவது தவறான செயல் அல்லவா?
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.