கேரள பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி.
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே, கேரளாவைச் சேர்ந்த நிதின் சந்தை குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.எர்ணாகுளம் மாவட்டம் பிறவம் பகுதியைச் சேர்ந்த 49 வயதான நிதின் சந்த், 2008-ஆம் ஆண்டு உயர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றி வந்தபோது, ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் முக்கிய தலைவரான 55 வயது மார்ட்டின் டேவுடன் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் இந்த நட்பு காதலாக மாறியது.இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டிலேயே இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், தனது சொந்த மாநிலமான கேரளாவில் குருவாயூர் கோயிலில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது நிதின் சந்தின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது.திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளம், அதன்பின்னர் கொரோனா பெருந்தொற்று மற்றும் அரசியல் தேர்தல் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் அந்த விருப்பம் நிறைவேறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில், அனைத்து தடைகளையும் கடந்து ஆகஸ்ட் 18-ஆம் தேதி குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் இவர்களது திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
மார்ட்டின் டே கேரள பாரம்பரிய உடையான முண்டு மற்றும் மேலாடை அணிந்து நிதின் சந்துக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். நிதின் சந்த் பட்டுப் புடவை அணிந்து திருமணத்தில் பங்கேற்றார்.திருமண நிகழ்வில் நிதின் சந்தின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.