கேரளாவில் தொடரும் கனமழை: 5 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை
கேரளாவின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி எர்ணாகுளம், வயநாடு, காசர்கோடு, ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் அங்கன்வாடிகள், பள்ளிகள், மதரஸாக்கள், பயிற்சி மையங்கள், சிறப்பு வகுப்புகள் மற்றும் தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதேவேளை, வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தங்கும் வசதி கொண்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இந்த விடுமுறை உத்தரவிலிருந்து விலக்கு பெறுகின்றன. மேலும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பல்கலைக்கழகத் தேர்வுகள், பொதுத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் வழக்கம்போல நடைபெறும் என்று காசர்கோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதனுடன், கோழிக்கோடு மாவட்டத்தின் வடகரை மற்றும் தாமரச்சேரி வட்டங்களிலும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவு பள்ளிகள், மதரஸாக்கள், பயிற்சி மையங்கள், தொழில்முறை கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு பொருந்தும். தேவையெனில், கல்வி நிறுவனங்கள் இணையவழி வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.