நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்தின் விரிவாக்கப் பணிகளின் ஒரு பகுதியாக, தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 3-வது அணு உலையில் 2027 டிசம்பரிலும், 4-வது அணு உலையில் 2028 டிசம்பரிலும் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு அணு உலைகளிலும் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு 1,507.51 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
அதேபோல், ஆந்திரப் பிரதேசத்திற்கு 226 மெகாவாட், கர்நாடகாவுக்கு 256 மெகாவாட், புதுச்சேரிக்கு 9 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, மத்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் மின் நிலையத்தை அமைக்கின்றனவோ, அந்த மாநிலத்திற்கு அங்கு உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில் 50 சதவீதம் ஒதுக்கப்படும். ஆனால், கூடங்குளம் விரிவாக்க மின் நிலையத்தைப் பொறுத்தவரை தமிழகத்திற்கு 75.63 சதவீத மின்சாரம்ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ ஒதுக்கீட்டு ஆணையை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.