குன்னூர் அருகே சிறுத்தைகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சிறுத்தைகள் அடிக்கடி தென்படுவதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பகல் நேரங்களில் அருகிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் தங்கியிருக்கும் சிறுத்தைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.சிறுத்தைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தும், அவற்றைப் பிடிப்பதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை கூண்டு வைத்து விரைந்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.