காவிரி டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்
காவிரி டெல்டா பகுதிகளை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி, நாளை (ஆகஸ்ட் 28) மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கைகள்:
* காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அரசு அறிவிக்க வேண்டும்.
* காவிரியில் போதிய தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
* விவசாயப் பணிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும்.
* விவசாயிகளின் அனைத்து கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
* டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, வறட்சி பாதித்த பகுதிகளில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.
போராட்டம் நடைபெறும் மாவட்டங்கள் மற்றும் பங்கேற்போர்
திருவாரூரில் மு.வீரபாண்டியன், வை.செல்வராஜ் எம்.பி., க.மாரிமுத்து எம்.எல்.ஏ., எஸ்.கேசவராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.நாகப்பட்டினத்தில் ரா.முத்தரசன், சிவகுரு, பாண்டியன் ஆகியோரும், தஞ்சாவூரில் பி.எஸ்.மாசிலாமணி, மு.அ.பாரதி, கோ.சக்திவேல் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.மயிலாடுதுறையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வை.சிவபுண்ணியம், கோ.பழனிச்சாமி மற்றும் அ.சீனிவாசன் ஆகியோரும், கடலூரில் டி.எம்.மூர்த்தி, பி.துரை ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.திருச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.
பி.பத்மாவதி, எம்.செல்வராஜ், எஸ்.சிவா, செ.ராஜ்குமார் ஆகியோரும், புதுக்கோட்டையில் அ.பாஸ்கர், முத்து உத்திராபதி, த.செங்கோடன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.இந்த முற்றுகைப் போராட்டங்களுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு மு.வீரபாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.