காவல் நிலையத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா தர்ணா; டெல்லியில் பரபரப்பு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுத்தனர்.கடந்த மாதம் 21-ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் வன்முறையாக மாறியது.அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் போராட்டத்தில் பங்கேற்ற சில மாணவர்கள் காயமடைந்தனர். அதேவேளை, போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீசார் தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.மாணவர்கள் போராட்டத்தின்போது போலீசார் அத்துமீறி தாக்கியதாக கூறப்படும் புகார் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.இந்த சூழலில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இளைஞர்கள் மீது போலீசார் நடத்தியதாக கூறப்படும் தடியடி தொடர்பாக புகார் அளிக்க இன்று நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்றார்.
போராட்டத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவரையும் அவர் உடன் அழைத்துச் சென்றிருந்தார்.தமது புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, காவல் நிலையத்திலேயே ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சி தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.இளைஞர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் காவல் நிலையத்தில் தர்ணா நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.