Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்தது ஏன்? – தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலு கேள்வி

காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்தது ஏன்? – தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலு கேள்வி
சட்டப்பேரவையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, இரு பட்ஜெட்டுகள் குறித்த விவாதம் 7, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கு நிதி அமைச்சர் மரிய வில்சனும், வேளாண்மை அமைச்சர் வினோத்தும் கடந்த 12-ந்தேதி பதிலளித்தனர்.இதையடுத்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் 2-வது நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சரத்குமார் பதிலளித்து வருகின்றனர்.இந்த விவாதத்தின்போது, தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டுப் பேசிய எம்.எல்.ஏ. எ.வ. வேலு, காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பினார்.அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் பல்வேறு தலைவர்களுக்கு சிலைகள் மற்றும் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையிலேயே கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்ததாகவும் தெரிவித்தார்.“தி.மு.க. அரசு கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை காமராஜர் உணவுத் திட்டம் என்று மாற்ற வேண்டிய தேவை என்ன? புதிதாக ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்கு காமராஜர் பெயரை வைத்திருக்கலாம். நாங்கள் தொடங்கிய திட்டத்தின் பெயரை ஏன் மாற்ற வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.‘முதலமைச்சர்’ என்பது பொதுவான பதவி என்பதால் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடாத வகையில் அந்தப் பெயர் வைக்கப்பட்டதாகவும் எ.வ. வேலு கூறினார். மேலும், இந்த திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டிய காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.ஸ்டாலின் பெயரில் காலை உணவுத் திட்டத்தை அழைக்கலாம் என்று கூறப்பட்டபோதும், அதனை மு.க.
Advertisement
ஸ்டாலின் ஏற்கவில்லை என்றும் எ.வ. வேலு தெரிவித்தார். முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் என்ற பெயர் இருந்தால், பின்னர் யாரும் அதை மாற்ற முடியாது என ஸ்டாலின் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தொடர்ந்து காமராஜருக்கு தி.மு.க. செய்த மரியாதைகள் குறித்து பேசிய எ.வ. வேலு, சென்னையில் காமராஜருக்கு சிலை அமைத்து, அப்போதைய பிரதமர் நேருவை அழைத்து திறப்பு விழா நடத்தியதாக கூறினார். குடியாத்தம் தொகுதியில் காமராஜரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளரை நிறுத்தாதவர் அண்ணா என்றும் அவர் குறிப்பிட்டார்.காமராஜருக்கு சிலையும் மணிமண்டபமும் அமைத்தவர் கருணாநிதி என்றும், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து அவருக்கு பெருமை சேர்த்ததும் கருணாநிதிதான் என்றும் எ.வ. வேலு தெரிவித்தார்.மேலும், தந்தை பெரியாரை கொள்கைத் தலைவராக த.வெ.க. அரசு குறிப்பிடுவதாகக் கூறிய அவர், அந்த அரசு பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆன நிலையிலும் கோவையில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் நூலகம் இன்னும் திறக்கப்படவில்லை என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் பிறந்த மாவட்டம் முன்பு வடஆற்காடு என்றும், தற்போது அது வேலூர் மாவட்டம் என்றும் அவர் கூறினார்.பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தான் பிறந்தது திருச்சி மாவட்டம் என்பதை சட்டப்பேரவையில் பதிவு செய்தார். பெரியார் கொள்கையை தாங்கள் பின்பற்றுவதாக தம்பட்டம் அடிப்பதாக கூறிய எ.வ. வேலுவுக்கு பதிலளித்த அவர், அறிவாலயத்தில் இன்றும் பெரியார் சிலை இல்லை என்றும், தங்கள் அலுவலகத்தில் பெரியார் சிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்த விவாதத்தின்போது, மானியக் கோரிக்கைகள் தொடர்பான கருத்துகளை மட்டும் தெரிவிக்குமாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், எ.வ. வேலுவிடம் அறிவுறுத்தினார். அப்போது எ.வ. வேலு மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையிலான உரையாடலை முதல்-அமைச்சர் விஜய் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு