பாளையங்கோட்டை அருகே நான்குவழிச் சாலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது காய்கறி ஏற்றிச் சென்ற மினி லாரி மோதிய விபத்தில், லாரியின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுரையில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி மினி லாரி ஒன்று இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. இந்த லாரியை கலைக்குமார் ஓட்டிச் சென்றார். லாரியின் முன்பக்க இடதுபுற இருக்கையில் அதன் உரிமையாளரான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் காசிலிங்கம் (56) அமர்ந்திருந்தார். பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் பகுதியில் நான்குவழிச் சாலையில் லாரி சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக வேகமாக மோதியது.
Advertisement
மோதியதில் மினி லாரியின் இடதுபுறம் கடுமையாக சேதமடைந்தது. அந்தப் பகுதியில் அமர்ந்திருந்த காசிலிங்கம் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். லாரியை ஓட்டிய கலைக்குமார் காயமின்றி உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பாளையங்கோட்டை மீட்புப் படையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த காசிலிங்கத்தின் உடலை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.