“ஏன் காவி நிற உடை?” – பிரியா வாரியரிடம் செய்தியாளர் கேட்ட சர்ச்சை கேள்வி
மலையாளத்தில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர். அந்தப் படத்தில் அவர் கண் சிமிட்டும் காட்சி மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றார். தொடர்ந்து மலையாளம் மட்டுமின்றி இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் பிரியா வாரியர், திரைப்படங்களைத் தாண்டி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் அவர் காவி நிற உடை அணிந்து பங்கேற்றார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர், “எதற்காக காவி நிற ஆடை அணிந்திருக்கிறீர்கள்? கேரளாவில் விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்சு அலர்ட் காரணமா?” என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.எதிர்பாராத இந்தக் கேள்வியால் பிரியா வாரியர் சற்று சங்கடமடைந்ததாக தெரிகிறது. பின்னர் அதற்குப் பதிலளித்த அவர், அந்த நிறுவனத்தின் பிராண்ட் நிறமே காவி என்பதால், அதற்கு ஏற்ற வகையில் அந்த நிற ஆடையைத் தேர்வு செய்ததாக விளக்கம் அளித்துள்ளார்.இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரியா வாரியரிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து, தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.