என்.எல்.சி. விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம்
தமிழக சட்டசபையில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் தொடர்பாக இன்று கடும் விவாதம் நடைபெற்றது.அப்போது பேசிய உறுப்பினர் ஒருவர், என்.எல்.சி. நிறுவனம் விளைநிலங்களை அழித்து, நிலத்தடி நீரையும் பயன்படுத்தி வரும் நிலையில், அப்பகுதி மக்களின் நலனுக்காக போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம்சாட்டினார். நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியாக (சி.எஸ்.ஆர்.) ஒரு சதவீதம் வழங்கப்படுகிறதா என்பதையும் கேள்வி எழுப்பினார்.மேலும், என்.எல்.சி. நிறுவனத்துக்காக நிலம் வழங்கிய உள்ளூர் மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக நுழைவுத்தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். என்.எல்.சி. நிர்வாகம் வழங்கும் தகவல்கள் நம்பகத்தன்மையற்றவை என்றும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பில், என்.எல்.சி. நிர்வாகம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்படும் நிலையில், அவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் கூறப்பட்டது. என்.எல்.சி. குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் புகார்களை ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதன் விவரங்கள் சவுமியா அன்புமணிக்கு தெரிவிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
யாருக்கும் எதிராக அரசு செயல்படாது என்றும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. என்.எல்.சி. நிர்வாகத்தில் தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே, என்.எல்.சி. நிறுவனத்தின் செயல்பாடுகளால் விருத்தாசலம் தொகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அப்பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீரில் கால்சியம் இருப்பதால் சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும், இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், என்.எல்.சி. மூலம் விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.இதையடுத்து, என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் ஆளும் தரப்பு மற்றும் உறுப்பினர்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.