உத்தராகண்ட்: திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரும்புப் பாலம் – ஓட்டுநருடன் வாகனம் மாயம்
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள நிதிப் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த கனமழையால் டமாக் ஓடையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தின் வேகத்தில் எல்லைச் சாலைகள் அமைப்புக்குச் சொந்தமான இரும்புப் பாலம் சில நொடிகளிலேயே இடிந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. பாலத்தின் அருகே இருந்த எல்லைச் சாலைகள் அமைப்பின் வாகனமும் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரும் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் கிடைத்ததும் மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாயமான ஓட்டுநரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் நிதிப் பள்ளத்தாக்கு பகுதிக்கான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாற்றுப் பாதையை அமைக்கும் பணிகளை எல்லைச் சாலைகள் அமைப்பு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.