உத்தரப் பிரதேசம்: பாம்பு கடித்த தம்பியை 150 முறை அறைந்து விழிப்புடன் வைத்த அண்ணன்!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்டோய் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை விஷப்பாம்பு கடித்தது. உடனடியாக அவர் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.தம்பியை அழைத்துச் செல்லும் முன், அவர் எந்த காரணத்தாலும் மயங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தூங்க விடாமல் தொடர்ந்து விழிப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அண்ணனிடம் அறிவுறுத்தினர். பாம்பின் விஷத்தன்மை காரணமாக நோயாளி தூங்கினால் கோமா நிலைக்கு செல்லும் அல்லது உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தம்பி மெல்ல கண்களை மூடி மயங்கத் தொடங்கினார்.
இதனால் பதற்றமடைந்த அண்ணன், அவரை விழிப்புடன் வைத்திருக்க முயன்றார். ஆம்புலன்சில் தம்பியின் அருகிலேயே அமர்ந்து, அவரது பெயரைச் சொல்லி அழைத்தபடி கன்னத்தில் தொடர்ந்து அறைந்தார்.மருத்துவமனை சென்றடையும் வரை சுமார் 150-க்கும் மேற்பட்ட முறை தம்பியின் கன்னத்தில் அறைந்து, அவர் மயங்காமல் விழிப்புடன் இருக்கச் செய்தார்.மாவட்ட மருத்துவமனையை அடைந்ததும், அந்த வாலிபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலம் பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.சரியான நேரத்தில் தம்பியை தூங்கவிடாமல் விழிப்புடன் வைத்த அண்ணனின் துரிதமான நடவடிக்கை அவரது உயிரைக் காப்பாற்ற உதவியதாக மருத்துவர்களும், அங்கு இருந்த பொதுமக்களும் பாராட்டினர்.