ஈரான் மீது வார இறுதியில் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவு? – தகவலால் மீண்டும் பதற்றம்
ஈரான் மீது இந்த வார இறுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், மேற்காசியாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகளின் பின்னணியில் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது கடுமையான வான்வழித் தாக்குதலை மேற்கொண்டன. அந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததாகவும், தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு வரி விதிக்க ஈரான் முடிவு செய்ததாக கூறப்படுவதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன. கடந்த சில நாட்களாக அமெரிக்கா–ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலில் இருப்பதால், மத்திய கிழக்கில் நிலவிய பதற்றம் ஓரளவு குறைந்திருந்தது. ஆனால் தற்போது ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருப்பது புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.ஈரானுக்கு எதிராக இந்த வார இறுதியில் தாக்குதல் நடத்துமாறு அமெரிக்க ராணுவத்துக்கு டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், ஈரானை சரணடைய வைக்கும் நோக்கில் இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என தெரிவித்துள்ளார்.