இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.23.67 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைப்பு
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில், பக்தர்களின் பயன்பாட்டுக்காக ரூ.23 கோடியே 67 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்ட முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.புதிய அன்னதானக் கூடத்தில் ஒரே நேரத்தில் 125 பேர் அமர்ந்து உணவருந்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தலா 25 பேர் அமரக்கூடிய வகையில் 24 விருந்து மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 80 பேருக்கு முதல்-அமைச்சர் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இதில் 36 பேர் உதவிப் பொறியாளர் (கட்டுமானம்), 38 பேர் உதவி ஸ்தபதி, 6 பேர் செயல் அலுவலர் (நிலை-1 மற்றும் நிலை-3) பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்து சமய அறநிலையத்துறையில் உதவிப் பொறியாளர் (கட்டுமானம்) மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முதன்முறையாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சமய நிறுவனங்களின் நிர்வாகம், மேற்பார்வை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அவ்வப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தலைமைச் செயலாளர் சாய்குமார், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய், கூடுதல் ஆணையர்கள் துரை ரவிச்சந்திரன் மற்றும் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.