இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் அவசியம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
புதுடெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் வேகப்படுத்துவதற்கு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பணியில் வங்கித் துறையின் பங்களிப்பை ஆராய்வதற்காக மத்திய அரசு விரைவில் உயர்மட்டக் குழுவை அமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.வளர்ச்சி பெற்ற இந்தியாவை உருவாக்குவது குறித்து விவாதிக்க தற்போது மிகவும் பொருத்தமான காலகட்டம் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், வங்கிகளின் வாராக்கடன் தற்போது குறைந்த அளவில் இருப்பது, புதிய சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாக கூறினார்.வங்கித் துறையினருடன் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தும், அரசு அமைக்க உள்ள உயர்மட்டக் குழுவால் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்தக் குழுவின் பரிந்துரைகள், எதிர்காலத்தில் வங்கித் துறையின் செயல்பாடுகள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உதவும் என்றும், அதே நேரத்தில் இந்தியப் பொருளாதாரத்திற்கு புதிய ஊக்கத்தை வழங்கும் வகையிலும் அமையும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.