ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நள்ளிரவு வரை பலத்த மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதனால் பூதப்பாடி கிராமம் அண்ணா நகர், பூனாச்சி, கெம்மியம்பட்டி, பட்லூர், முளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சூறைக்காற்றின் தாக்கத்தால் செந்தில்குமார் (43), வேலுச்சாமி (73), காவிரி (76), பரிமளா (56), மூர்த்தி (62), பூனாச்சி ஈசன் உள்ளிட்ட பல விவசாயிகளின் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
Advertisement
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 7 மாதங்களாக வளர்த்து வந்த நேந்திரன் வாழைகள் குலை தள்ளும் பருவத்தை எட்டியிருந்ததாக தெரிவித்தனர். உரம், மருந்து மற்றும் தொழிலாளர்களின் கூலி உள்ளிட்டவற்றுக்காக கணிசமான தொகையை செலவிட்ட நிலையில், திடீரென வீசிய சூறைக்காற்றுடன் கூடிய மழையால் வாழைகள் அனைத்தும் சேதமடைந்ததாக கூறினர். இந்த பாதிப்பால் தங்களுக்கு சுமார் ரூ.50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, சேதமடைந்த வாழைத்தோட்டங்களை கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.