அமைச்சர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வேண்டுகோள்
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை முடிந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சட்டசபையில் கேள்வி நேரம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்தனர்.இதையடுத்து சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்பாக அவை நடவடிக்கையின்போது அமைச்சர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக அமைந்தது. முதன்முறையாக சட்டசபை தொடர்ந்து 9 மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்றது.
அரசின் முக்கிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் அறிவிப்புகளில் இடம்பெறுகின்றன. ஆனால் புதிய அறிவிப்புகளை வெளியிடும்போது, அவற்றை அமைச்சர்கள் முழுமையாக அவையில் தெரிவிக்க முடியாத நிலை இருப்பது தனது கவனத்திற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து நேற்று இரவு சிந்தித்தபோது, அதிகாலை 2 மணியளவில் ஒரு யோசனை தோன்றியதாக சபாநாயகர் தெரிவித்தார். அமைச்சர்கள் பேசத் தொடங்கும்போது முன்னுரை ஏதேனும் கூற விரும்புகிறார்களா என தான் கேட்கும் நேரத்திலேயே, அரசின் அறிவிப்புகளை முழுமையாக வாசித்து முடித்துவிட வேண்டும் என்றார்.அவ்வாறு செய்தால், மீதமுள்ள நேரத்தை கருத்தில் கொண்டு அமைச்சர்கள் தங்களது பதிலுரையின் நீளத்தை குறைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.இனி நடைபெறும் மானியக் கோரிக்கை விவாதங்களின்போது அமைச்சர்கள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கேட்டுக்கொண்டார்.