அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார் – முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.கடந்த 12-ந்தேதி சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசுகையில், தனது தொகுதி சென்னையில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும், சட்டமன்ற பணிகளுக்காக பயணப்படி வழங்கப்பட்டாலும் தனக்கு சொந்தமாக வாகனம் இல்லை என்றும் தெரிவித்தார். இதனால் வாடகை வாகனத்தை பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறினார்.மேலும், தனது தொகுதிக்குள் சுமார் 40 கிலோமீட்டர் சுற்றளவில் பயணம் செய்து மக்களை சந்தித்து பணிகளை மேற்கொள்ள போதிய வாகன வசதி இல்லை என்றும், தனியாக உதவியாளரை நியமித்து ஊதியம் வழங்கும் அளவுக்கு வசதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற நிலைமையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு கார் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.இதைத்தொடர்ந்து, வசதி குறைந்த மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வாகன வசதி உள்ளிட்ட உதவிகளை வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசித்து வந்ததாக தகவல் வெளியானது.இந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று காலை கூடியபோது, 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று அறிவித்தார்.எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிகளில் மக்களை சந்தித்து பணிகளை தடையின்றி மேற்கொள்ளவும், தொகுதி சார்ந்த பணிகளை திறம்பட செய்யவும் இந்த வசதி ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், எம்.எல்.ஏ.க்கள் உதவியாளர்களை நியமித்துக் கொள்வதற்காக மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். ஓட்டுநர் ஊதியம், வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகளுக்காக மாதம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.