சென்னை அடையாறு மண்டலத்தில் நடைபெற்று வரும் பள்ளி மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., இன்று (17.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவான்மியூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப்பள்ளிக்கு சென்ற ஆணையாளர், பள்ளியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், காலை உணவு வழங்கும் பணிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளியில் நடைபெறும் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளையும் பார்வையிட்ட அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
Advertisement
இதையடுத்து, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும் ஆணையாளர் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மண்டல அலுவலர் என்.காளிதாஸ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.