அசாமில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆக உயர்வு
அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சனிக்கிழமை நிலவரப்படி, வெள்ளத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, மாநிலத்தில் 1.47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கையின்படி, 12 மாவட்டங்களில் ஒரு வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட 460 கிராமங்களைச் சேர்ந்த 1,47,376 பேர் வெள்ளத்தின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளனர்.சோனிட்பூர், நாகோன், கோலாகாட், சிவசாகர், ஹோஜாய், தர்ராங், ஜோர்ஹாட், தேமாஜி, சாரெய்டியோ, கர்பி அங்லாங், லக்கிம்பூர் மற்றும் பிஸ்வநாத் ஆகிய 12 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.இதில் கோலாகாட் மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு மட்டும் 61,735 பேர் தொடர்ந்து வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த சுமார் இரண்டு வாரங்களாக ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 133 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் மாநில அரசு சார்பில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.