வனத்துறை அமைச்சர் பேச்சு விவகாரம்: எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கோரிய முதல்-அமைச்சர் விஜய்
நான்கு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. துறைவாரியான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதமும் இன்று முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்தப்பட்டது.இதற்கு முன்பாக, கோவையில் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கர்நாடகாவில் தமிழர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானங்களை முன்வைத்தன. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.அப்போது பேசிய வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், தி.மு.க.
மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதற்கிடையில், தி.மு.க. உறுப்பினர் ராமச்சந்திரன் பேசிக்கொண்டிருந்தபோது, அமைச்சர் ரஞ்சித்குமார் தொடர்ந்து குறுக்கிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, அமைச்சரை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் எச்சரித்ததுடன், அவரது மைக் இணைப்பைத் துண்டிக்கவும் உத்தரவிட்டார்.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவையில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், வனத்துறை அமைச்சர் அந்த வகையில் பேசியிருக்கக் கூடாது என்று தெரிவித்தார். மேலும், அமைச்சர் சார்பில் எதிர்க்கட்சிகளிடம் தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.