ரூ.3,000 கோடி டிஜிட்டல் பணமோசடி வழக்கு: மேலும் 3 பேர் கைது - அமலாக்கத்துறை
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.3,000 கோடி அளவுக்கு நடைபெற்றதாகக் கூறப்படும் டிஜிட்டல் கைது உள்ளிட்ட இணையவழி பணமோசடி தொடர்பான வழக்கில் மேலும் 3 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.இதன்மூலம், கோவா மாநிலம் பனாஜியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த 23-ந்தேதி மும்பையில் பாகிம் மொயின் ஹுசைன் மற்றும் நயிம் முயீன் சயீது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளின் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், பூஷன் சூர்யகாந்த் மோயே, விலாஸ் நாராயண் பவார் மற்றும் சைலேஷ் தக்து ஆகிய மேலும் 3 பேரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் பனாஜியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை செப்டம்பர் 1-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. என்ன இந்த ‘டிஜிட்டல் கைது’ மோசடி?‘டிஜிட்டல் கைது’ என்பது இணையவழியில் மேற்கொள்ளப்படும் ஒரு வகையான மோசடி.
இதில் குற்றவாளிகள் அரசு அதிகாரிகள் போல தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, வீடியோ அழைப்புகள் மூலம் பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, பணத்தை இணையவழியாக அனுப்பும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.இந்த மோசடி குறித்து தெரியாமல் பலர் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்துள்ளனர். இதுதொடர்பான புகார்களும் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஒருவரை டிஜிட்டல் முறையில் கைது செய்வதற்கு சட்டத்தில் எந்தவிதமான நடைமுறையும் இல்லை. இந்தியாவில் ‘டிஜிட்டல் கைது’ என்பது சட்டப்பூர்வமானது அல்ல என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.இதுபோன்ற இணையவழி குற்றங்களுக்கு உடனடியாக தேசிய இணையக் குற்ற உதவி எண் 1930-க்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் cybercrime.gov.in இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம்.