அரசு நிலம் வழங்கினால் கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய மந்திரி சுரேஷ் கோபி
கேரள மாநிலம் திரிச்சூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. சுரேஷ் கோபி, மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை இணை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திரிச்சூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி பங்கேற்று பேசினார். அப்போது, “திரிச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று நான் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளிக்கவில்லை.
இந்த கோரிக்கை தேர்தல் முடிந்த பின்னர்தான் முன்வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு திரிச்சூர் மாவட்டம் பொருத்தமான இடம் என்ற கருத்துக்கு தான் ஆதரவு அளிப்பதாக அவர் கூறினார். கேரள அரசு தேவையான நிலத்தை வழங்கினால், திரிச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் சுரேஷ் கோபி தெரிவித்தார்.