மேகதாது விவகாரம்: முதல்-அமைச்சர் விஜய்யுடன் கர்நாடகா செல்லும் 13 பேர் கொண்ட குழு விவரம் வெளியீடு
காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை தொடர்பான விவகாரங்களை முன்னிறுத்தி, முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3-ஆம் தேதி கர்நாடகா செல்ல உள்ள நிலையில், அவருடன் பயணிக்கும் 13 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ குழுவின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நதிநீரை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பகிர்ந்து கொள்வது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறிப்பாக மழைப்பொழிவு குறையும் காலங்களில் இந்த விவகாரம் தீவிரமடைவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால், அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனுடன், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை அமைக்கும் முயற்சியையும் கர்நாடக அரசு முன்னெடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.இந்த விவகாரங்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ள முதல்-அமைச்சர் விஜய், காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரை நேரில் சந்தித்து ஆலோசிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் கடிதமும் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற திங்கட்கிழமை (3-ஆம் தேதி) அவர் பெங்களூருவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.பெங்களூருவில் உள்ள விதான சவுதா சட்டசபை வளாக மாநாட்டு அரங்கில் டி.கே.
சிவக்குமாருடன் விஜய் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்புக்கு தமிழ்நாட்டில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகளும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.இதற்கிடையில், மேகதாது அணை தொடர்பான விவகாரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமைச் செயலாளர், பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், கர்நாடகா பயணத்தில் முதல்-அமைச்சர் விஜய்யுடன் செல்லும் 13 பேர் கொண்ட குழுவின் பட்டியல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், தலைமைச் செயலாளர் சாய்குமார், நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும், மூத்த வழக்கறிஞர் உமாபதியும் இந்த பயணத்தில் முதல்-அமைச்சருடன் இணைகிறார். இந்தக் குழு வருகிற 3-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு கர்நாடகா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.