மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறதா தி.மு.க.? வடமாநில ஊடக தகவல்களால் பரபரப்பு
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், புதிய அமைச்சரவையில் தி.மு.க.வுக்கும் இடம் கிடைக்கலாம் என வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தற்போது 29 கேபினட் அமைச்சர்களும், 39 இணை அமைச்சர்களும் உள்ளனர். சமீபத்தில் ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து நடைபெற்ற தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்த சூழலில், மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மாற்றத்தில் தர்மேந்திர பிரதானுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், 20-க்கும் அதிகமான மத்திய அமைச்சர்களின் இலாகாக்களிலும் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இத்தகைய சூழலில்தான், மறுசீரமைக்கப்படும் அமைச்சரவையில் தி.மு.க. இடம்பெற வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல் கவனம் பெற்றுள்ளது.தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு இதுவரை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தி.மு.க., தற்போது சில நிபந்தனைகளுடன் அதற்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுவதை அடிப்படையாக வைத்து இந்த தகவல்கள் வெளியாகி வருவதாக வடமாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அதேவேளை, பா.ஜ.க.வுடன் எந்த நிலையிலும் கூட்டணி கிடையாது என்ற நிலைப்பாட்டை தி.மு.க.
தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதுவரை காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க., தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, தேசிய அளவிலான அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.நாடாளுமன்றத்தில் தி.மு.க.வுக்கு மக்களவையில் 22 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்களும் உள்ளனர். இதனால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும்போது தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவு மத்திய பா.ஜ.க. அரசுக்கு முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த பின்னணியிலேயே பா.ஜ.க.வும், தி.மு.க.வும் நெருக்கம் காட்டி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த 13-ந் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பங்கேற்றதும் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டே, மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க.வுக்கும் இடம் கிடைக்கலாம் என வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.