நேபாள வெள்ளப்பெருக்கில் குடும்பத்துடன் உயிர் தப்பிய இந்தி நடிகர்
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்காமல், இந்தி நடிகர் அங்குர் ரத்தன் தனது குடும்பத்தினருடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். வெள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே தாங்கள் தங்கியிருந்ததாகவும், இறைவனின் அருளால் உயிர் பிழைத்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, நேபாளத்தில் சுற்றுலா சென்றிருந்த பல இந்தியர்களின் நிலை குறித்த தகவல்கள் தெரியாததால், அவர்களது குடும்பத்தினரிடையே கவலை அதிகரித்துள்ளது.இந்தச் சூழலில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதியில் இருந்து தப்பியது குறித்து நடிகர் அங்குர் ரத்தன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ‘மாய்’ உள்ளிட்ட இந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துள்ள அவர், தனது மனைவி ஷில்பா மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 22-ம் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்குச் சென்றார்.வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு சுமார் 12 மணி நேரத்துக்கு முன்பாக, அங்குர் ரத்தன் தனது குடும்பத்தினருடன் ரசுவா பகுதியில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனால், அப்பகுதியில் ஏற்பட்ட பேரழிவின் தீவிரத்தை நினைத்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.இதுகுறித்து அங்குர் ரத்தன் கூறியதாவது:“மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நாங்கள் கைலாஷ் யாத்திரையைத் தொடங்கினோம். வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் நானும் என் மனைவியும் அந்தப் பகுதியில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.நாங்கள் தங்கியிருந்த ஓட்டல், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 15 நிமிட தொலைவில்தான் இருந்தது. நாங்கள் அங்கிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.இறைவனின் அருளால் நாங்கள் அனைவரும் உயிர் தப்பியுள்ளோம். ஆனால், இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நினைக்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. அவர்களின் துயரத்தை நினைத்து என் இதயம் வலிக்கிறது” என்றார்.