தூத்துக்குடி: லாரியில் பதுக்கி வைத்திருந்த 2.8 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள லாரி நிறுத்தம் பகுதியில், விற்பனைக்காக லாரியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்துக்கு உட்பட்ட மதுரை பைபாஸ் சாலை அருகே உள்ள லாரி நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏரல் மாறமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ் மகன் பொன்செல்வம் (22) மற்றும் தூத்துக்குடி பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் அசோக்குமார் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 2 கிலோ 800 கிராம் கஞ்சாவையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.