திருவண்ணாமலை கோவிலுக்குள் செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு தடை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், செப்டம்பர் 1-ந் தேதி முதல் கோவில் வளாகத்துக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கோவில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன்களை கொண்டு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க வசதியாக, கிழக்கு ராஜகோபுரம் அருகே 2 இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகே 2 இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகே ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மையங்களில் ரூ.5 கட்டணம் செலுத்தி செல்போனை ஒப்படைத்து, அதற்கான டோக்கனை பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம்.செல்போன் தடையை மீறி அவற்றை மறைத்து கோவிலுக்குள் கொண்டு செல்லும் நபர்களின் செல்போன்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். மேலும், போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.