சட்டசபையில் வினா-விடை நேரம் தொடங்கியது
தமிழக சட்டசபை இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்று முதல் சட்டசபையில் கேள்வி நேரம் நடைபெற உள்ளது. இதனுடன் 2 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறுகிறது.தமிழக சட்டசபையில் 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 7, 10, 11-ந் தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. ஆகஸ்டு 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் விவாதத்துக்கு பதிலளித்து பேசினர்.
இதையடுத்து, ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை 27 துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நிறைவடைந்துள்ளன.நேற்று மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டசபையில் இதுவரை கேள்வி நேரம் நடைபெறவில்லை.இந்த நிலையில், இன்று முதல் முறையாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வழக்கமாக கேள்வி நேரத்தில் 10 கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆனால், தற்போது 5 கேள்விகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து பதில்கள் கிடைக்காததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.கேள்வி நேரம் முடிந்ததும், பா.ஜ.க. உறுப்பினர் போஜராஜன், ஊட்டி படகு இல்லத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசுகிறார்.அதன்பின்னர் சமூக நீதித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்கின்றனர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வெ.சம்பத்குமார் ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர்.விவாதத்தின் முடிவில், இரு அமைச்சர்களும் தங்களது துறைகள் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.